விருதுநகரையும் எண்ணெய் பரோட்டாவையும் பிரித்துப் பார்க்க முடியாது. இந்தப்
பகுதியில் ஏராளமான எண்ணெய் ஆலைகள் இருப்பதாலோ என்னவோ, மற்ற ஊர்களில்
கல்லில் போட்டுச் சுடுகிற பரோட்டாவை இவர்கள் எண்ணெயில் போட்டுப்
பொரித்தெடுக்கிறார்கள். சேர்க்கப்படுகிற எண்ணெயில் சிறிய வேறுபாடுதான்
என்றாலும் சுவையில் பெரிய வித்தியாசம் இருக்கிறது.
என்னென்ன தேவை?
மைதா மாவு - 1 கிலோ
தண்ணீர் - 350 மி.லி
கடலை எண்ணெய் - 50 மி.லி
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
மைதா மாவுடன் தண்ணீர், கடலை எண்ணெய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு
பிசையவும். பிசைந்த மாவை சுமார் அரை மணிநேரம் ஊறவிடவும். பின்னர் மாவைச்
சிறு சிறு துண்டுகளாக்கி, வழக்கமாக பரோட்டா வீசுவதுபோல் வீச வேண்டும்.
பின்னர், தோசைக்கல்லின் நடுவில் எண்ணெய் ஊற்றி அது சூடாகும் வரை
பரோட்டாவைக் கல்லின் ஓரப் பகுதியைச் சுற்றி அடுக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதால் பரோட்டா மாவில் கலந்திருந்த தண்ணீர் வற்றிக்
காய்ந்துவிடும். பின்னர், பரோட்டாவைக் கல்லின் நடுப் பகுதிக்குக்
கொண்டுவந்து, எண்ணெயில் லேசாக வாட்டி பிறகு கல்லின் ஓரப் பகுதியிலேயே
வேகவைக்க வேண்டும்.
இவ்வாறு வேகவைப்பதால் அதிக எண்ணெயும் குடிக்காமல், முறுக்குப்போல மொறு
மொறுப்பாகவும் இல்லாமல் சரியான பதத்தில் எண்ணெய் பரோட்டா தயாராகிவிடும்.
Comments
Post a Comment