சீடன் ஒருவன் ஞானம் தேடி ஆசிரமம் ஒன்றில் சேர்ந்தான். அங்கு ஞானம் அடைவதற்கு முதல் படியாக ''நீ உன்னையே உணர்வாயாக'' என்றார் குரு.அது அவனுக்குப் எப்படி என்பது புரியவில்லை. ஒருநாள் அவன் அரசமரத்தடியில்
அமர்ந்து இருந்தபோது காய்ந்த இலை ஒன்று மரத்திலிருந்து உதிர்வதைக் கண்டான்.
அதையே பார்த்துக் கொண்டிருந்த அவன் திடீரென ஆடிப்பாட ஆரம்பித்தான்.
ஆசிரமத்தில் இருந்த மற்றவர்கள்,''என்ன படித்தீர்கள்? அதை எங்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்!''என்று கேட்டனர்.
அந்த சீடன் சொன்னான்,''எதையும் படித்து நான் கற்றுக் கொள்ளவில்லை. மரத்திலிருந்து காய்ந்த இலை ஒன்று விழுவதைக் கண்டேன். என் ஆசை நிறைவேறி விட்டது,''
மற்றவர்கள் சொன்னார்கள், ''நாங்களும்தான் மரத்திலிருந்து இலைகள் விழுவதைப் பார்க்கிறோம். அது உன்னை மட்டும் எப்படி பாதித்தது?''
அதற்கு அவன், ''ஒரு காய்ந்த இலை விழுவதைப் பார்த்ததும் என்னிலிருந்து ஏதோ
கீழே விழுந்தது. இன்று இல்லாவிட்டாலும் நாளையாவது நானும் இந்த இலையைப் போல
விழுந்துவிடுவேன் என்பதைப் புரிந்து கொண்டேன். பின் எதற்குப் பெருமை,கர்வம்
எல்லாம்? காய்ந்த இலையைக் காற்று உதைத்து எல்லா திசைகளிலும் மாறி மாறி
அடித்துச் செல்வதைக் கண்டேன். நாளை அது சாம்பலாகிவிடும். நானும் அந்த
இலையைப் போன்றே அலைவேன். இன்றிலிருந்து நான் இங்கில்லை. இதை அந்த காய்ந்த
இலையிலிருந்து கற்றுக் கொண்டேன்.'' என்று கூறினான்.
ஆம்..! நாள் என்பது
பகல் மட்டுமல்ல இரவும் சேர்ந்ததே. மரணம் வாழ்கையின் எதிரி அல்ல அதுவும்
வாழ்வின் ஒர் அங்கமே. அது இன்றி வாழ்க்கை முழுமை பெறாது.
Comments
Post a Comment