உப்பு,
காரமில்லாத உணவு எப்படி பலருக்கும் தொண்டைக்குள் இறங்க மறுக்குமோ,
அப்படித்தான் புளிப்புச் சுவை இல்லாத உணவும். இன்னும் சொல்லப் போனால்
புளிப்பு சற்றே தூக்கலாக இருந்தால்தான் பலருக்கும் முழுமையாக சாப்பிட்ட
திருப்தியே வரும்.புளியிலிருந்து பெரிதாக நமக்கு சத்துகள் எதுவும்
கிடைப்பதில்லை. அது சமையலுக்கு ருசி கூட்டுகிற தவிர்க்க முடியாத ஒரு
பொருள்... அவ்வளவுதான். வெறும் புளியைக் கரைத்துக் கொதிக்க வைத்து, கொஞ்சம்
மிளகு, சீரகம், பூண்டு தட்டிப் போட்டுச் செய்கிற ரசம் பசியோடு இருக்கிற பல
நேரங்களில் அமிர்தமாக ருசிக்கும்.
வெறும் புளித்தண்ணீர்தான்...
ஆனாலும், அதற்கு அப்படியோர் சுவை. இன்னும் அன்றாடச் சமையலில் சாம்பார்,
வத்தக் குழம்பு, கூட்டு என பெரும்பாலான உணவுகளுக்கு புளி சேர்த்தால்தான்
ருசியே. தென்னிந்தியச் சமையலைப் பொறுத்த வரை புளிப்புச் சுவைக்கு
புளிக்குத்தான் முதலிடம். எலுமிச்சை, மாங்காய் போன்றவை எல்லாம்
அப்புறம்தான்.
புளியில் நிறைய நல்ல அம்சங்களும், கொஞ்சம் கெட்ட
விஷயங்களும் உள்ளன. ஆயுர்வேத மருத்துவத்தில் புளிக்கு முக்கிய இடமுண்டு.
குறிப்பாக லேகியம் உள்ளிட்ட அவர்களது மருந்துத் தயாரிப்புகளில் புளி
சேர்ப்பார்கள். அப்போதுதான் அது கெட்டுப் போகாது. வயிறு சம்பந்தப்பட்ட
மருந்துகளுக்கும் புளி சேர்ப்பதுண்டு. புளி மிகச்சிறந்த மலமிளக்கி. எனவே,
மலச்சிக்கலுக்கும் இது நல்ல மருந்து.
புளிய இலையின் துளிர்களைக்
கொதிக்க வைத்துச் செய்கிற கஷாயம், மலேரியா நோய்க்கு மருந்தாகப்
பரிந்துரைக்கப்படுகிறது. புளியங்கொட்டைக்கும் மருத்துவக் குணம் உண்டு.
கண்களுக்கான டிராப்ஸ் தயாரிப்பில் புளியங்கொட்டை பயன்படுத்தப்படுகிறதாம்.
தொண்டைக் கமறல், ஜலதோஷமாக இருக்கும் போது, ரசம் சாப்பிடச் சொல்வார்கள்.
நீர்த்த புளிக்கரைசலுடன், மிளகு, சீரகமும் சேர்ந்து, தொண்டைக் கமறலை
குணப்படுத்தும். காய்ச்சல், மஞ்சள் காமாலை வந்தவர்களுக்கு புளி சேர்த்த
உணவு கொடுப்பதன் பின்னணியும் இதுதான்.
புளி மிகச்சிறந்த ஆன்ட்டி
ஆக்சிடன்ட். ரத்தத்தைச் சுத்திகரிக்கக் கூடியது. புற்றுநோய்க்கு எதிராகப்
போராடக் கூடியது. வெளிப்பூச்சுக்கும் புளி நல்ல மருந்து. அந்தக் காலங்களில்
ரத்தக் கட்டுக்கு புளிப்பற்று போடுவார்கள். அதே போல தலைவலி, தோல்புண்,
வீக்கம் போன்றவற்றுக்கும் புளியைத் தடவினால் நிவாரணம் தரும். இத்தனை நல்ல
குணங்கள் உள்ள புளியை ஒருவர் ஒரு நாளைக்கு 10 கிராம் அளவுக்கு மேல்
எடுக்கக் கூடாது. அந்த அளவு தாண்டினால், பேதி ஏற்படும்.
யாருக்கெல்லாம் புளி கூடாது?
இதய
நோயாளிகள் ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக் கொள்வதால், அவர்களுக்கு புளி
கூடாது. ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் மற்றும் ருமட்டாயிட் ஆர்த்ரைடிஸ் பிரச்னை
உள்ளவர்களுக்கும் புளி வேண்டாம். அது அவர்களது ரத்தத்தில் உள்ள யூரிக்
அமிலத்தின் அளவை அதிகரிக்கும். அலர்ஜி பிரச்னை உள்ளவர்களும் புளி அதிகம்
எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவார்கள். நீரிழிவு
நோயாளிகளும் புளியை அளவோடு எடுத்துக் கொள்வதே நல்லது. அது குளூக்கோஸின்
அளவை குறைத்து விடும். ரத்தத்தை சுண்டும் குணம் கொண்டது புளி என்பதால்
எல்லோருமே அளவோடு அதை உபயோகிப்பதே பாதுகாப்பானது
என்ன இருக்கிறது? 100 கிராம் புளி விழுதில்
கலோரி 283 கிலோ கலோரி
புரதம் 3.1 கிராம்
கொழுப்பு 0.1 கிராம்
நார்ச்சத்து 5.6 கிராம்
இரும்பு 17 மி.கி.
கால்சியம் 170 மி.கி.
புளி ஸ்பெஷல் ரெசிபி
புளி அவல்
என்னென்ன தேவை?
கைக்குத்தல்
சிவப்பு அவல் - 100 கிராம், கெட்டியான புளிக்கரைசல் - கால் கப்,
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு,
பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிப்பதற்கு, வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
அவலைக்
கழுவி, ஊற வைத்து, வடித்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு,
உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, வேர்க்கடலை,
மஞ்சள் தூள் சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் புளிக்கரைசலை விட்டு, உப்பு
சேர்த்துக் கொதிக்கவிடவும். எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து, எண்ணெய் கக்கும்
அளவுக்கு கொதித்ததும் இறக்கவும். இதுதான் புளிக்காய்ச்சல். கடாயில் சிறிது
எண்ணெய் விட்டு, இன்னும் சிறிது கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து
தாளித்து, ஊறிக் கொண்டிருக்கிற அவலைச் சேர்த்துப் பிரட்டவும். பிறகு அதில்
புளிக்காய்ச்சலை சேர்த்துக் கிளறி, பரிமாறவும்.
குடம்புளி குழம்பு
என்னென்ன தேவை?
குடம்புளி
- 2 துண்டு, கத்தரிக்காய் - கால் கிலோ, சின்ன வெங்காயம் - 10, குழம்பு
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், கீறிய பச்சை
மிளகாய் - 1, உப்பு - தேவைக்கேற்ப, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்
பருப்பு, கறிவேப்பிலை - தாளிப்பதற்கு.
எப்படிச் செய்வது?
குடம்புளியை
சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும். கத்தரிக்காயை நான்காக வகிர்ந்து
கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்க வேண்டியவற்றைச் சேர்த்து,
வெங்காயம் சேர்த்து வதக்கவும். கத்தரிக்காயும் பச்சை மிளகாயும் சேர்த்து
நன்கு வதக்கவும். குடம்புளியை அப்படியே கரைக்கவும். அது சாதாரண புளி மாதிரி
கரையாது. சக்கையை நீக்க வேண்டாம். அதிலேயே குழம்பு மிளகாய் தூளைச்
சேர்த்துக் கரைத்து, கத்தரிக்காய் கலவையில் கொட்டி, உப்பு சேர்த்துக்
கொதிக்க விடவும். இது பார்ப்பதற்கு சற்றே நீர்த்த மாதிரித் தெரியும்.
ஆனால், நேரம் போகப் போக கெட்டியாகும்.
புளிசட்னி
என்னென்ன தேவை?
பேரீச்சம் பழம் - 10, வெல்லம் - 50 கிராம், புளி பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன், காஷ்மீரி மிளகாய் - 1.
எப்படிச் செய்வது?
பேரீச்சம்
பழத்தை விதை நீக்கி, தண்ணீரில் ஊற வைக்கவும். மிக்ஸியில் முதலில் மிளகாயை
அரைக்கவும். பிறகு பேரீச்சம் பழம் சேர்த்து அரைத்து, அடுத்து வெல்லம்
சேர்த்து அரைக்கவும். கடைசியாக புளி பேஸ்ட் சேர்த்து நன்கு கலந்து
ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளவும். இட்லி, தோசை, சப்பாத்தி என எல்லா
வற்றுக்கும் தொட்டுக் கொள்ளலாம். பிரெட்டில் ஸ்பிரெட் மாதிரித் தடவி
சாப்பிடவும் நன்றாக இருக்கும். பேரீச்சம் பழம் சாப்பிட மறுக்கும்
குழந்தைகளுக்கும் இந்த வகையில் கொடுத்தால் சாப்பிடுவார்கள்.
Comments
Post a Comment